ராஜஸ்தான் காங்கிரஸ் பிளவுக்கு பிள்ளையார் சுழி? அசோக் கெலாட்டை ஓஹோவென மோடி புகழ்ந்ததால் புகைச்சல்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கும் நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்திருப்பதும் பிரதமர் மோடியை அசோக் கெலாட் புகழ்ந்திருப்பதும் பெரும் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காங்கிரஸும் ஒன்று. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் போர்க்கொடி தூக்கிப் பார்த்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சமாதானப்படுத்தியதால் சச்சின் பைலட் அமைதியானார்.

கெலாட்- பைலட் சர்ச்சை
அண்மையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் கெலாட், பைலட் இடையேயான மோதல் அம்பலத்துக்கு வந்தது. காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் பதவிக்கு கெலாட் போட்டியிடுவது உறுதியாகி இருந்தது. அப்படி கெலாட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சச்சின் பைலட்டை முதல்வராக்க கூடாது என பெரும்பாலான கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலகக் குரல் எழுப்பினர். தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர்.

பிரதமர் மோடி
இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, தாம் காங்கிரஸ் தலைவர் தேர்தலிலேயே போட்டியிடவில்லை என அறிவித்தார் கெலாட். இதன்பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் பஞ்சாயத்துக்கு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் உட்கட்சி மோதலில் எண்ணெய் ஊற்றும் வகையில் பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் யார் பங்கேற்றது?
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் விடுதலைப் போராட்ட தியாகிகளை நினைவுகூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், மத்தியப்பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால், மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் பக்கான் சிங் குலஸ்தே ஆகியோர் பங்கேற்றனர்.

மோடி- கெலாட் பரஸ்பரம் புகழாரம்
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் நானும் முதல்வர்களாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். இன்றைய மாநில முதல்வர்களில் மிகவும் சீனியர் அசோக் கெலாட் என புகழ்ந்தார். அதேபோல் அசோக் கெலாட் பேசுகையில், பிரதமர் மோடி வெளிநாடுகள் செல்லும் போது மிகப் பெரிய மரியாதை கிடைக்கிறது. இது நமக்கு பெருமை தரக் கூடியது என்றார். இப்படி பிரதமர் மோடியும் அசோக் கெலாட்டும் மாறி மாறி புகழ்ந்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பைலட் கோஷ்டியினரை கொந்தளிக்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications