ஒன்இந்தியா செய்தியை ரீட்வீட் செய்த பிரதமர் மோடி: அவரை சந்திக்க விரும்பும் சாதனை மாணவிகள்
பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த 5 பள்ளி மாணவிகள் மக்காத குப்பையை வாங்கி விற்கும் செல்போன் அப்ளிகேஷனை கண்டுபிடித்தது குறித்து ஒன்இந்தியா வெளியிட்ட செய்தியை பார்த்து பிரதமர் மோடி அந்த மாணவிகளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள நியூ ஹாரிசன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சஞ்சனா வசந்த், அனுபமா, மஹிமா மெஹன்தலே, ஸ்வஸ்தி பி. ராவ் மற்றும் நவ்யாஸ்ரீ. 14 வயதாகும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து செல்லிக்ஸோ என்ற ஆன்ட்ராய்டு செல்போன் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர். அந்த அப்ளிகேஷன் மூலம் மக்காத குப்பையை வாங்கி, விற்கலாம்.

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த டெக்னோவேஷன் சேலஞ் 2015 தொழில்நுட்ப போட்டியில் மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு ரூ.6 லட்சத்து 34 ஆயிரத்து 296 ரொக்கம் பரிசாக கிடைத்துள்ளது. இதை வைத்து மாணவிகள் தங்கள் அப்ளிகேஷனை மேம்படுத்த உள்ளனர்.

இது குறித்த செய்தி ஒன்இந்தியா இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒன்இந்தியா இணையதளத்தில் மாணவிகள் பற்றிய செய்தியை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் ஒன்இந்தியாவின் செய்தி லிங்க்கை இணைத்துள்ளார்.
Congrats to these youngsters. Kudos to their innovative zeal & proud of their efforts to create a Clean India. http://t.co/xZlm3sGJl6
— Narendra Modi (@narendramodi) July 2, 2015 இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
மாணவிகளுக்கு என் வாழ்த்துக்கள். சுத்தமான இந்தியாவுக்காக அவர்களின் கண்டுபிடிப்பு, திறமை ஆகியவற்றை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். மோடி வெளியிட்ட இந்த ட்வீட்டை ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்துள்ளனர். மேலும் பாஜகவின் ஐடி பிரிவும் ஒன்இந்தியா செய்தியை ட்வீட் செய்துள்ளது. சிறுமிகள் மோடியை சந்தித்து பேச பள்ளி நிர்வாகம் முறையாக அவரை அணுக உள்ளது. சிறுமிகள் டெல்லி செல்கையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து பேசவும் விரும்புகிறார்கள்.

இது குறித்து பள்ளி சேர்மன் டாக்டர் மோகன் மங்னானி கூறுகையில்,
எங்கள் மாணவிகள் நாடு முழுவதும் உள்ள மாணவிகளுக்கு முன்மாதிரியாகியுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து எங்களுக்கு வாழ்த்துச் செய்தி வருகிறது. அனைத்து தேசிய ஊடகங்களும் இது குறித்த செய்தியை வெளியிட்டபோதிலும் ஒன்இந்தியாவின் செய்தி தான் பலரையும் அடைந்துள்ளது. அதிலும் மோடி ஒன்இந்தியா செய்தியை ட்வீட் செய்ததில் இருந்து எங்களுக்கு போனில் வாழ்த்துக்கள் குவிகின்றது. ஒன் இந்தியா செய்தியை பார்த்துவிட்டு இங்கிலாந்தில் இருந்து ஒரு பேராசிரியர் போன் செய்து வாழ்த்தினார் என்றார்.












Click it and Unblock the Notifications