டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்.. நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பாமக
டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை பாமக நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளை பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேன்று நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவியது. இதனால் நீரின்றி பயிர்கள் வாடியதால் மனமுடைந்த விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.40,000 கோடி நிவாரணத் தொகை இன்னும் கிடைக்கவில்லை. மேலும் நீர் ஆதாரங்களை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்துவிட்டு தமிழக விவசாயிகள் மடிந்து வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வறட்சி நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் 7 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை கடந்த வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்த தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற போராடுவதாகவும், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டத்துக்கு பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். தற்போது விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications