நேதாஜி ஆவணங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுப்பு... வெளிநாட்டு உறவுகள் பாதிக்கும் பதில்
டெல்லி : சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது என தகவல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. வெளியிட்டால் வெளிநாடுகளுடனான உறவு பாதிக்கும் எனவும் கூறியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால், தலைமை தகவல் ஆணையத்திற்கு மனு செய்தார்.
அந்த மனுவில், சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ், கடந்த1945-ம் ஆண்டு முதல் மாயமனார். 70 ஆண்டுகள் ஆகியும் அவர் உயிருடன் உள்ளாரா? எங்கிருக்கிறார்? என்ற தகவல் இதுவரையில்லை. இது தொடர்பாக ஆவணங்களை வெளியிடுமாறு பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது.. தகவலறியும் உரிமை சட்டசம் விதி 8 பிரிவு 1ஏ -ன் படி , நாட்டின் அறிவியல், பொருளாதார நலன், வெளிநாடுகளுடனான பரஸ்பரம் நல்லுறவு பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் தகவல் வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட முடியாது. அது நாட்டின் வெளியுறவுகளை பாதிக்கும். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை தலைமை தகவல் ஆணையம் , மனுதாரருக்கு அளித்துள்ள பதிலில் கூறியுள்ளது. எனினும் இந்த தகவல் மீதான மறு உத்தரவு தள்ளி வைக்கப்பட்டது.