@PMOIndia ட்விட்டர் கணக்கு பத்திரமாக உள்ளது: அது புது அரசுக்கே
டெல்லி: @PMOIndia என்ற ட்விட்டர் கணக்கு அடுத்து பதவிக்கு வரும் அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருக்கையில் துவங்கபட்ட ட்விட்டர் கணக்கு @PMOIndia பிரதமர் அலுவலக நிர்வாகிகளால் நிர்வகித்து வரப்பட்டது. இந்நிலையில் மன்மோகன் சிங் பதவி விலகிய பிறகு அந்த கணக்கில் இருந்த ட்வீட்கள் மற்றும் ஃபாலோயர்கள் @PMOIndiaArchive என்ற கணக்கிற்கு மாற்றப்பட்டது.
@PMOIndia என்பது மன்மோகன் சிங்கின் சொத்து அல்ல நாட்டின் சொத்து. அப்படி இருக்கையில் ட்விட்டர் கணக்கை எப்படி மாற்றலாம் என்று பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மன்மோகன் சிங் இருந்தபோது இருந்த ட்விட்டர் கணக்கில் இருந்தவை வேறு ஒரு கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. @PMOIndia என்ற ட்விட்டர் கணக்கு பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. அது புதிதாக வரும் பிரதமர் அலுவலக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். புதிய அரசு பதவி ஏற்ற பிறகு அனைத்து பிஎம்ஓ இன்டர்நெட் தளங்கள் மற்றும் தகவல் தொடர்புகள் பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பில் விடப்படும் என்று அதில் தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறுகையில்,
@PMOIndia என்ற ட்விட்டர் கணக்கு புதிய பிரதமர் அலுவலகத்திற்கு தான். அதை ட்விட்டர் அதிகாரிகளே அவர்களிடம் ஒப்படைப்பார்கள். முந்தைய பிரதமர் ஆட்சியில் செய்யப்பட்ட ட்வீட்கள் மட்டுமே @PMOIndiaArchive என்ற கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.
ஆவணங்களை புதிய அரசிடம் ஒப்படைப்பது போன்று ட்விட்டர் கணக்கையும் ஒப்படைத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு புதிய கணக்கிற்கு ட்வீட்களை மாற்றியது ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாஜகவின் ஐ.டி. குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.