அரசு உறைவிடப்பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்: சமையல்காரர், வார்டன் கைது
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு உறைவிட பள்ளியில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அதே பள்ளியின் சமையல்காரரையும், அஜாக்கிரதையாக இருந்த பாதுகாவலரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் சிந்தகி தாலுகா அலமேலு பகுதியில் கித்தூர் சென்னம்மா என்ற பெயரில் அரசுக்கு சொந்தமான உண்டு உறைவிட பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபகாலமாக அப்பள்ளியின் சமையல்காரர் அங்கிருந்த மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விடுதி காப்பாளர் ஜோதியிடம் மாணவிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த மாணவிகள் இது தொடர்பாக பெண்கள் உதவி மையத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பினர்.
அப்புகாரின் படி விசாரணை மேற்கொண்ட போலீசார் விடுதியின் சமையல்காரர் மற்றும் பாதுகாவலரைக் கைது செய்துள்ளனர்.