டெல்லியில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி உள்ளிட்ட மூவர் கைது: ரூ.25 கோடி ஹெராயின் பறிமுதல்
டெல்லி: டெல்லியில் இன்று போலீசார் நடத்திய திடீர் சோதனையின்போது, 10 கிலோ ஹெராயின் போதை மருந்து வைத்திருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் சர்வதேச போதைப்பொருள் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 10 கிலோ போதைப் பொருளை வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் போதை மருந்து விற்பனை செய்ய வந்தவர்கள் என்பதும், இவர்களில் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர், ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸ்காரர் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.25 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிசம்பரில் பறிமுதல்
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை கைது செய்த டெல்லி போலீசார் அவர்களிடமிருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 9 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்திருந்தனர்.
அவர்கள் மூவரும் கொடுத்த தகவலின் பேரில் அவதார் சிங் என்ற சர்வதேச போதை மருந்து கடத்தல் நபரை கைது செய்தனர். அவன் பயணம் செய்த சாண்ட்ரோ காரை சோதனை செய்த போது 32 கிலோ ஹெராயினும், 2 கிலோ கோகெய்னும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் அவனது வீட்டில் மேலும் 6 கிலோ ஹெராயின் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாகவே இப்போது அடுத்தடுத்து போதை மருந்து கும்பல் டெல்லியில் பிடிபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications