மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்.. லாரியை வைத்தே ஏற்றி கொன்ற மாஃபியா கும்பல்..கர்நாடகாவில் கொடூரம்
பெங்களூர்: கர்நாடகாவின் கல்பர்க்கி மாவட்டத்தில் மணல் கடத்தி வந்த லாரியை நிறுத்த முயன்ற போலீசை, வாகனத்தை நிறுத்தாமல் ஏற்றிக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இயற்கை வளங்களை சுரண்டி சூறையாடும் கும்பல்கள் அதை தடுக்க செல்லும் நேர்மையான அதிகாரிகளை தயங்காமல் கொலை செய்யும் காட்சிகள் அவ்வப்போது சினிமா காட்சிகளில் காட்டப்படும். ஆனால், இது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும் இல்லை நிஜத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
சட்ட விரோதமாக இப்படி மணல் கடத்தும் கும்பல்களை வருவாய் துறை அதிகாரிகளோ, போலீசாரோ தடுத்த நிறுத்த முயற்சித்தால் ஈவு இரக்கமின்றி வாகனங்களில் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்களும் கும்பலாக திரண்டு தாக்குதல் நடத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் மணல் கடத்தல் மாஃபியாக்கள் போலீஸ் ஒருவரை லாரியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- கர்நாடகாவின் கல்பர்க்கி மாவட்டத்தில் நாராயணபுர என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமப பகுதியில் பல இடங்களிலில் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் பலர் ஈடுபடுவதாக குற்றாச்சாட்டு உள்ளது.
இதனால், அவ்வப்போது அங்கு வரும் வாகனங்களை போலீசார் செக் போஸ்ட்டில் மறித்து சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில், நேற்று மாலை சவுகான் என்ற போலீஸ் ஒருவர், மணல் கடத்தி வரலாம் என்ற சந்தேகத்தின் பேரில் லாரியை நிறுத்த சொன்னார். ஆனால், லாரியை நிறுத்தாமல் வந்த ஓட்டுநர் சித்ஹன்னா என்பவர், அந்த போலீசாரை ஏற்றிக் கொலை செய்து விட்டு நிற்காமல் சென்று விட்டார்.
லாரி ஏறி இறங்கியதில் நிகழ்விடத்திலேயே சவுகான் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, லாரியை ஏற்றி போலீசை கொலை செய்த டிரக் ஓட்டுநரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மணல் கடத்தி வந்த லாரியையும் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
காங்கிரஸ் ஆட்சி அங்கு மீண்டும் அமைந்துள்ள நிலையில், பல்வேறு நலத்திட்டங்களையும் நிறைவேற்றி மக்கள் மத்தியில் நற்பெயரை எடுக்க வேண்டும் என்று முனைப்பு கட்டி வரும் சித்தராமையா அரசுக்கு இதுபோன்ற மணல் மாஃபியாக்கள் கும்பல்களின் அடாவடி செயல்கள் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications