புலி ஷூட்டிங்கில் ஆந்திரா போலீசார் ரெய்டு- சந்தடி சாக்கில் திருப்பதி போன ஸ்ருதிஹாசன்
ஹைதராபாத்: ஆந்திரா வனப்பகுதியில் தமிழர்கள் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் விஜய்யின் 'புலி' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இங்கு வந்த ஆந்திர போலீசார் செம்மரம் கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என சோதனை செய்து கெடுபிடி ஏற்படுத்தினர். இத்தனை களேபரத்திற்கு இடையிலும் படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் திருப்பதிக்கு போய் ஏழுமலையானை தரிசித்து வந்திருக்கிறார்.
திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

புலி படப்பிடிப்பு
இதனிடையே சித்தூர் மாவட்டத்தில் உள்ள ‘தலைக்கோணை' நீர்வீழ்ச்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக பிரபல நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி' என்ற தமிழ் சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பில் 300 பேர்
விஜய்யுடன், நடிகை சுருதிஹாசன், பிரபு மற்றும் துணை நடிகர், நடிகைகள் உட்பட சுமார் 300 பேர் அந்த பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட செட் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

தப்பிய தமிழர்கள்
போலீசாரின் தாக்குதலில் தப்பிய செம்மரக் கடத்தல்காரர்கள் இந்த தலைக்கோணம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என கருதிய ஆந்திரா போலீசார், வனப்பகுதியில் தீவிரமாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சோதனைச் சாவடி அமைப்பு
இதற்காக நெரபைலு என்ற இடத்தில் புதிதாக ஒரு சோதனைச்சாவடியை அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். இந்த வழியாகத் தான் புலி சினிமா யூனிட்டை சேர்ந்த வாகனங்களும் சென்றுவருகின்றன.

வாகன சோதனையில்
முன்பு எல்லாம் படப்பிடிப்புக்கு வரும் வாகனங்களை போலீசார் சோதனையிடுவதில்லை. சமீபத்திய என்கவுண்டர் சம்பவத்திற்குப் பின்னர் கடந்த 3 நாட்களாக சினிமா யூனிட்டின் வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

படப்பிடிப்பில்
அதோடு மட்டுமல்லாது ஷூட்டிங் நடைபெறும் இடத்திலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆயுதம் தாங்கிய 30 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மரம் வெட்டுபவர்கள்
தமிழ் சினிமா படப்பிடிப்பு என்பதால், தமிழ் மொழி மட்டுமே தெரிந்த செம்மர கடத்தல்காரர்கள் இவர்களுடன் கலந்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

திருப்பதி தரிசனம்
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான மனநிலை நிலவுகிறது. படப்பிடிப்பில் போலீஸ் கெடுபிடியினாலும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஹீரோயின் ஸ்ருதி ஹாசன், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications