3000 அடி உயரத்தில் உள்ள தலைமலையிலிருந்து விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல்
முசிறியில் உள்ள தலைமலை கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
Recommended Video
முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக எருமைப்பட்டி போலீஸார் தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்களின் நேர்த்தி கடன் மிகவும் சிறப்பம்சம் பெற்றதாகும். இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே கிரிவலம் வந்தனர்.
இன்று காலையில் கிரிவலம் வந்த இளைஞர் ஒருவர் 3000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தார். ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த இளைஞரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த எருமைப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தவறி விழுந்த இளைஞரை மீட்பதற்கு வனத்துறை, தீயணைப்புத் துறை ஆகியோரின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர். எனினும் அந்த இளைஞர் குறித்து அவரது குடும்பத்தார் யாரும் புகார் அளிக்காததால் அவரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.