காங்.-மஜத கூட்டணி ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம்.. பாஜகவின் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதன் விளைவாக ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில், காங்கிரசுக்கு மக்கள் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கடந்த 12ம் தேதி கர்நாடக சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78, மஜத 38 தொகுதிகளிலும் வென்றன.
இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். எவ்வளவோ பின்வாசல் முயற்சிகளை எடுத்தும்கூட பாஜகவுக்கு பிற கட்சிகளை சேர்ந்த போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.
எடியூரப்பா பதவி
இதையடுத்து 56 மணி நேரத்தில், முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ்-மஜத கூட்டணியில் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பு இரு கட்சிகளுமே ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மோசமாக குற்றம்சாட்டிக்கொண்டவர்கள். அவர்களின் இந்த கூட்டணி அரசை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதே பாஜக பிரச்சாரமாக உள்ளது.
விமர்சனங்களை ஏற்கவில்லை
பெங்களூரில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிய நிலையில், அதில் காங்கிரஸ் வேட்பாளர் அபார வாக்குகள் முன்னிலையில் வென்றுள்ளார். பாஜக வேட்பாளர் எதிர்பார்த்ததைவிடவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இதன் மூலம், பாஜகவின் விமர்சனங்களை மக்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
உருக்கமாக பேசிய எடியூரப்பா
மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபையில் எடியூரப்பா உரை நிகழ்த்தும்போது, அதிக சீட்டுகளை பாஜக பெற்றாலும் கூட காங்கிரஸ்-மஜத கள்ள கூட்டணி அமைத்து மக்கள் எண்ணத்திற்கு எதிராக நடந்து கொண்டதாக உருக்கமாக உரை நிகழ்த்தினார். விவசாயிகளுக்காக உழைக்க போவதாகவும், 2019 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 28 தொகுதிகளையும் கர்நாடக மக்கள் பரிசளிக்க வேண்டும் என்றும் உருக்கமாக பேசினார்.
காரணங்கள் இதுதான்
ஆனால் ராஜராஜேஸ்வரி நகரில் எடியூரப்பா பிரச்சாரம் செய்த பிறகும்கூட வந்துள்ள ரிசல்ட்டை பார்த்தால் அவரது உருக்கமான பேச்சு மக்களிடம் எடுபடவில்லை, பாஜகவின் விமர்சனங்களும் எடுபடவில்லை என்பது தெரிகிறது. இது மட்டுமின்றி காங்கிரஸ் வேட்பாளரான சிட்டிங் எம்எஎல்ஏ முனிராஜுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் அதிகப்படியான செல்வாக்கும், காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.