பாகிஸ்தானுக்கு பாராட்டு தெரிவிப்பதா? காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத்துக்கு தலைவர்கள் கண்டனம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரத்தில் சட்டசபை தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்காக பாகிஸ்தான், ஹூரியத் மற்றும் தீவிரவாத அமைப்பினருக்கு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் பாராட்டு தெரிவித்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீரத்தின் முதல்வராக ஞாயிற்றுக்கிழமையன்று பதவியேற்ற முப்தி முகமது சயீத் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான், ஹூரியத் இயக்கம், தீவிரவாத அமைப்புகள், எல்லைக்கு அப்பால் உள்ள அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பு இல்லாமல் காஷ்மீர் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்தி இருக்க இயலாது என்று கூறியிருந்தார்.

இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் முப்தி முகமதுவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பும் செய்தன. அதே நேரத்தில் தம்முடைய கருத்து சரிதான் என்று முப்தி முகமது மீண்டும் தெரிவித்திருந்தார். அவருக்கு மகள் மெஹ்பூபாவும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
முப்தி முகமதுவின் கருத்துக்கு கண்டனம் ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சித் தலைவர் பீம்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முப்தி முகமதுவின் பேச்சு ஏற்புடையது அல்ல என்றும் அவர் சாடியுள்ளார். அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நரசிம்ம ராவ், ஷானவாஸ் ஹூசைன் ஆகியோரும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்த கருத்தையே எதிரொலித்தனர்.
அதாவது, முப்தி முகமதுவின் கருத்துடன் உடன்பாடு இல்லை என்றும் மாநிலத்தின் வளர்ச்சியே தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை அவசியம்- முப்தி
இதனிடையே ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்றால் பக்கத்து நாட்டுடன் (பாகிஸ்தான்) பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும். இதைத்தவிர வேறு வழி இல்லை என்றும் முப்தி முகமது வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி உங்களிடம் ஏதாவது வாக்குறுதி அளித்தாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது குறித்து அவர் வாக்குறுதி எதையும் அளிக்கவில்லை; பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications