மகாராஷ்டிரா, ஹரியானாவில் சட்டசபை தேர்தல்: 45%க்கும் மேல் வாக்குப் பதிவு!
மும்பை: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலில் 45%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகின.
மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், சுயேட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 119 பேர் களத்தில் இருந்தனர்.
தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மத்திய ரிசர்வ் படையினர் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.

தலைவர்கள்...
முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான் காரத் தொகுதியில் வாக்களித்தார். முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் பாரமதி தொகுதியிலும் முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே சோலாபூர் தொகுதியிலும், எதிர்கட்சி தலைவர் வினோத் தாவ்டே மும்பையிலும், தேசிய வாத காங்கிரஸ் எம்பி சுப்ரீயா சூலே அவரது தாயார் பிரதீபா பவார் ஆகியோரும் மும்பையில் வாக்களித்தனர்.

பிரபலங்கள்..
பாலிவுட் பிரபலங்களான ரேகா, ஜெயாபச்சன், அபிஷேக் பச்சன், அமோல் பலேகர், நடிகர்கள் மாதவன், குல்ஷன் ம்குரோவர், சித்தார்த் சுக்லா, ராகுல் மகாஜன், ராகுல் போஸ், ரித்தீஷ் தேஸ்முக், அதுல் குல்கர்னி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் மும்பையில் உள்ள தங்கள் வாக்குசாவடிகளில் வாக்களித்தனர்.

ஹரியானாவில்..
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் துணை ராணுவப் படையினர் உள்பட 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அவை தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டன.

போட்டி...
ஹரியானாவில், காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய தேசிய லோக் தளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹரியானா தேர்தலில் ஆயிரத்து 351 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு
இம்மாநிலத்திலும் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

துப்பாக்கிச் சூடு
ஹரியானாவின் சிர்சா மாவட்டம் மோடிகேந்திரா கிராமத்தில் பாஜகவினருக்கும் இந்திய தேசிய லோக் தளம் கட்சியினருக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டது. வாக்கு சாவடியை கைப்பற்றும் முயற்சியும் நடந்தது. வாக்குச்சாவடிக்கு வெளியே நடந்த இந்த மோதலில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தொண்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

45%க்கும் அதிகமான வாக்குப் பதிவு
இரு மாநிலங்களிலும் சுமார் 45%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமையன்று எண்ணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications