ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்: பொன்.ராதகிருஷ்ணன் உறுதி
டெல்லி: தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உறுதியான நம்பிக்கையை அளித்துள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்நிலையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுமா? இல்லையா என்ற சந்தேகம் மாடு பிடிவீர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் இயற்றப்படுமா? என்ற கேள்விக்கு, ஜல்லிக்கட்டுப் போட்டி இந்த ஆண்டு நடத்தப்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அதற்காக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் உறுதி அளித்துள்ளார் என்றார். மேலும் நாடாளுமன்ற அவைகள் முடங்கியிருப்பதால் அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூற முடியாது என பொன் ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார்.