காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு... 2 பாதுகாப்பு படையினர் உள்பட 5 பேர் பலி
ஸ்ரீநகர்: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 2 ராணுவத்தினர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தின் அல்லபீர் பகுதியில் உள்ள ராணுவத்தின் 93வது படைப்பிரிவின் தலைமையகம் இயங்கி வருகிறது. இந்த முகாமை தாக்க போராட்டக்காரர்கள் சிலர் அப்பகுதிக்கு வந்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த உடன் மாநில போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினரும் ராணுவத்தினரும் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராஜிந்தர் பிரசாத் என்ற போலீஸ்காரர் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் காயமடைந்துள்ளார். பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சண்டையில் 2 ராணுவத்தினர் உள்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைப் போன்றே ஜம்மு-காஷ்மீரிலும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது. பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காஷ்மீரில் நடைபெற்ற பின்னர் இந்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.