தேசியவாதம் ஆபத்தானது.. பொருளாதாரம் பாழாகும்.. ரகுராம் ராஜன் யாரை எச்சரிக்கிறார் தெரிகிறதா?
டெல்லி: தேசியவாதம் என்பது மிகவும் ஆபத்தானது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் அவர் இதுகுறித்து கூறியாதாவது: ஜனரஞ்சக தேசியவாதம் என்பது பொருளாதாரத்தை சீரழித்துவிடும். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வகை தேசியவாதம் பொருளாதாரத்தை பின்னோக்கி கொண்டு செல்லும்.
பெரும்பான்மை சமூகத்தினரின் உணர்வுகளை தூண்டிவிட்டுதான் ஜனரஞ்சக தேசியவாதம் செயல்படுகிறது. உலகம் முழுக்கவும் இதுபோன்ற பிரசாரங்கள் உள்ளன. இந்தியாவிலும் அது உள்ளது.
இட ஒதுக்கீடு
சுய பச்சாதாபம் ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற இந்த வாதம் பயன்படுகிறது. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதை சுட்டிக் காட்டியும் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடக்கின்றன.
வேலைவாய்ப்பு அவசியம்
இதுபோன்ற பிரச்சாரங்களை தவிர்க்க பெரும்பான்மை சமூகத்தினருக்கும் வேலை வாய்ப்பு போதிய அளவில் கிடைக்க வழி செய்ய வேண்டும். சிறுபான்மையினர் வரலாற்று ரீதியில் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தை தொடர்ந்து கூறியபடி பெரும்பான்மையினருக்கு வேலைவாய்ப்பை மறுப்பது இதுபோன்ற எதிர்மறை பிரச்சாரங்கள் வலுபெற காரணமாகிவிடும்.
தேசப்பற்று வேறு
தேசியவாதம் என்பதை நான் நாட்டுப்பற்று என்பதோடு இணைத்து பார்க்கவில்லை. இரண்டும் வேறு. தேசியவாதம் என்பது பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது, ரொம்ப ஆபத்தானது.
குரல்கள் கேட்கப்பட வேண்டும்
அதேநேரம் இதற்காக குரல் கொடுப்போர் எல்லோரையும் கொடுமைக்காரர்களாக பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் குரலும் கேட்கப்பட வேண்டியதுதான். இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.