சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் மறைவு: பிரணாப், மோடி இரங்கல்
டெல்லி: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்த செல்லப்பன், அபிராமி தம்பதியரின் 3-வது மகனான எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூரின் அதிபராக மிக நீ்ண்ட காலம் பதவி வகித்தவர்.
இந்நிலையில் பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அதில், எஸ். ஆர். நாதனின் இறப்பு அந்த நாட்டிற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் தனித்துவம் வாய்ந்த மாபெரும் தலைவரை இழந்து நிற்கும் இத்தருணத்தில் அவரது குடும்பத்தாருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.