மருத்துவமனையில் தற்கொலை மிரட்டல் விடுத்த ‘மண்வாசனை’ பிரதியுஷாவின் காதலன்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை பிரதியுஷாவின் காதலர், மருத்துவமனையில் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை பிரதியுஷா (24), இம்மாதம் 1ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான அவர், காதலருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சோக முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, இது தொடர்பாக அவரது காதலர் ராகுலிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 3ம் தேதி போலீசாரின் விசாரணையின் போது ராகுலுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசில் புகார்...
இதற்கிடையே, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி, தனது மகளின் மரணத்திற்கு ராகுல் தான் காரணம் என பங்கூர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கைப் பதிவு செய்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை...
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகுல்சிங்கை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார் ராகுல்.
மருத்துவமனையில்...
மருத்துவமனைக்கு வந்ததும் குளியலறைக்குச் சென்ற ராகுல், கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டு நீண்ட நேரம் திறக்கவில்லை. அவர்கள் குளியலறை கதவை தட்டி வெளியே வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், ராகுல் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவர்களிடம் இது குறித்து தெரிவித்தனர்.
தற்கொலை மிரட்டல்...
சம்பவ இடத்திற்கு மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் விரைந்து வந்தனர். அப்போது, குளியலறையில் ஜன்னல் வழியே வெளியேறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ராகுல் மிரட்டியுள்ளார்.
கவுன்சிலிங்...
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், எந்த வித விபரீத முடிவும் எடுத்துவிடாதபடிக்கு ராகுலுக்கு வெளியே இருந்தபடியே ஆலோசனை வழங்கி அவரை சமாதானம் செய்தனர். அதன்பின்னர் அவர் குளியலறைக் கதவைத் திறந்து வெளியே வந்தார்.
டிஸ்சார்ஜ்...
பின்னர் அவருக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.