ப்ரீத்தி ஜிந்தா- நெஸ் வாடியா விவகாரம்: சாட்சியமளிக்கிறார் டெண்டுல்கர் மகன் அர்ஜூன்?
மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தொழிலதிபர் நெஸ் வாடியா விவகாரத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.பி.எல். போட்டிகளின் போது மும்பை வான்கடே மைதானத்தில் முன்னாள் காதலர் நெஸ் வாடியா தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் புகார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ப்ரீத்தி ஜிந்தாவிடம் மும்பை போலீசார் நேற்று வான்கடே மைதானத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இவ்வழக்கில் சாட்சியமளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ப்ரீத்தி ஜிந்தா- நெஸ் வாடியா தகராறின் போது அர்ஜூன் டெண்டுல்கரும் அருகில் இருந்ததாகவும் அவரிடமும் நெஸ் வாடியா அத்துமீறி நடந்தார் என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அர்ஜூன் டெண்டுல்கரிடமும் மும்பை போலீசார் வாக்குமூலம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.