இந்தியா வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது: குடியரசு தலைவர் பிரணாப் உரை !
டெல்லி: இந்தியா வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
நாட்டின் 67வது குடியரசு குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை:
இந்தியா வளர்ச்சியை நோக்கி வேகமாக நகர்கிறது. இந்தியாவின் பொருளாதார சாதனை மற்ற நாடுகளை பொறாமைப்பட வைத்துள்ளது. இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டது. உலகப் பொருளாதாரம் சிக்கலில் இருந்தபோது வளர்ச்சி பெறுவது என்பது எந்த நாட்டிற்கும் எளிதானதல்ல.
சர்வதேச அளவில் பொருளாதாரம் சிக்கலான சூழ்நிலையில் இருந்த போதும், இந்தியா வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது.
தற்போது வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறும் நாடாக இந்தியா உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. சகிப்பின்மை மற்றும் வன்முறையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும். கண்ணியமான முறையில் மாற்றுக்கருத்தை வெளிப்படுத்த வேண்டும். முடிவுகள் எடுப்பதில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். அண்டை நாடுகளுடனான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையே சிறந்த வழி.
ஸ்டர்ட் அப் இந்தியா திட்டம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும். 96 கோடி பேரை எட்டியுள்ள ஆதார் அட்டை மூலம் நேரடி பணபரிவர்த்தனை நடைபெறுகிறது. சுகாதாரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. இந்த உரிமை குறிப்பாக நகரங்களில் மீறப்பட்டுள்ளது, நகரங்களில் மாசுபாடு எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது.
தீவிரவாதம் ஒரு புற்று நோய். அது உறுதியாக அகற்றப்பட வேண்டிய ஒன்று. தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் அல்லது கெட்ட தீவிரவாதம் என்று எதுவும் இல்லை. அது நிச்சயமாக ஒரு அழிவு சக்தி தான். நாட்டு மக்கள் அனைவருக்கும், நாட்டின் 67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரணாப் முகர்ஜி தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.