திப்பு சுல்தான் சிறந்த வீரர்... கர்நாடகாவில் புகழ்ந்த ஜனாதிபதி... ஷாக் ஆன பாஜகவினர்!
கர்நாடகாவில் இருந்த சிறந்த வலிமையான வீரர்களில் திப்பு சுல்தானும் ஒருவர் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழ்ந்திருப்பது பாஜகவினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு : கர்நாடகாவில் இருந்த வலிமையான வீரர்களில் திப்பு சுல்தானும் ஒருவர் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்து புகழ்ந்து பேசி இருப்பது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான சவுதாவின் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று கர்நாடக சட்டசபையில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் வலிமையான வீரர் ஆங்கிலேயருடன் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். முன்னேற்றத்திற்கு அடிக்கோளிடும் நாயகனாக இருந்த அவர் போர் சமயங்களில் ராக்கெட்டுகளை பயன்படுத்தினார்.

கர்நாடகாவின் வீரர்கள்
பிற்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் பின்பற்றத் தொடங்கினர். கர்நாடகா வலிமையான வீரர்களின் நிலமாகவே இருந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னராக விளங்கினார். அவர் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு உத்வேகமாக விளங்கினார்.

புகழ்ந்து தள்ளிய ஜனாதிபதி
பெங்களூரை நிறுவிய கெம்பேகவுடா, கிட்டூரின் ராணி சென்னமா மற்றும் ராணி அபக்கா ஆங்லிகேயரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டனர்.சமீபத்தில், எங்கள் சிறந்த இராணுவத் தலைவர்களான பீல்ட் மார்ஷல் கே எம் காரியப்பா மற்றும் ஜெனரல் கே.எஸ். திம்மையா ஆகியோர் கர்நாடகாவின் மகன்கள் ஆவார்கள் என்று ராம்நாத் கோவிந்த் புகழாரம் சூட்டினார்.

பாஜக எதிர்ப்பு
கர்நாடகாவில் நவம்பர் 10ம் தேதி திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திப்பு சுல்தான் மாவீரர் என்பதை ஏற்க முடியாது இந்துக்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் எதிராக செயல்பட்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதை ஏற்க முடியாது என்றும் பாஜக குற்றம்சாட்டியது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய பேச்சு
கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு சிறுபான்மையினரின் வாக்குகளை குறிவைத்து திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு சார்பாக கொண்டாடுகிறது என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திப்பு சுல்தானை புகழ்ந்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு
கர்நாடக சட்டசபையில் திப்பு சுல்தானை, குடியரசுத் தலைவர் வாழ்த்தி பேசிய போது காங்கிரஸ் கட்சியினர் மேஜையை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதனால் பாஜக எம்எல்ஏக்கள் சங்கடத்திற்கு ஆளாகினர். குடியரசுத் தலைவரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக சட்டமன்ற தலைவர் ஈஸ்வரப்பா, காங்கிரஸ் அரசு திப்புவின் பெயரை வைத்து குடியரசுத் தலைவர் அலுவலகத்தை தவறான வழிகாட்டுதல் மூலம் தவறாக வழி நடத்தியுள்ளது என்றார்.

பாஜக கண்டனம்
குடியரசுத்தலைவர் பேசிக்கொண்டிருக்கும் கொண்டிருந்த போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது பாதுகாப்பு மீறல் என்பதாலேயே பாஜகவினர் அமைதியாக இருந்தோம். எனினும் எங்களது எதிர்ப்பை நாங்கள் பதிவு செய்கிறோம் என்றும் அவர் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications