மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி.. மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் என்ன.. ரூல்ஸ் என்ன?
இம்பால்: மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமாக மணிப்பூரே உள்ளது. இங்கு 11 முறை இதுவரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக நீடிக்கும் கலவரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை. இதற்கிடையே அம்மாநில முதல்வர் பைரேன்சிங் கடந்த 9 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மணிப்பூர் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்ட நிலையில், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

மணிப்பூரில் முதல்வர் ராஜினாமா செய்த நிலையில், அங்கு தற்போது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் ஆட்சி என்றால் என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
மாநில அரசை கலைத்து மத்திய அரசின் நேரடி ஆட்சியை குடியரசுத்தலைவர் ஆட்சி என்பது குறிக்கிறது. மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவராக ஆளுநராக இருப்பார். சட்ட சபை கலைக்கப்படும் அல்லது ஒத்தி வைக்கப்படும்.இத்தகைய சூழலில் 6 மாதங்களில் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தலாம். அதேவேளையில் குடியரசுத்தலைவர் ஆட்சியை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.
குடியரசுத்தலைவர் ஆட்சியை அதிகபட்சம் ஒரு அறிவிப்பில் 6 மாதம் வரை நீட்டிக்க முடியும். அதன்பிறகு அடுத்தடுத்த அறிவிப்புகள் என மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க இடமுள்ளது. இந்திய அரசியல் அமைப்பின் 356 குடியரசுத்தலைவர் ஆட்சிக்கான அதிகாரத்தை வழங்கியுள்ளது. மத்திய கேபினட் கவுன்சில் பரிந்துரையின் பேரில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும்.
குடியரசுத்தலைவர் ஆட்சியினால் நிர்வாக ரீதியிலான மாற்றங்களை தவிர மக்களுக்கு நேரடியாக வேறு எந்த பாதிப்பும் இல்லை. ஒரு மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அரசு மிகப்பெரிய முடிவுகள் எதையும் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகள் எதையும் அமல்படுத்த முடியாது. மீண்டும் புதிய அரசு அமையும் வரை இந்த நிலையே நீடிக்கும்.
குடியரசுத்தலைவர் ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் விலக்கி கொள்ள முடியும். இதற்கு பாராளுமன்ற ஒப்புதல் எதுவும் தேவையில்லை. மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2000-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அந்த மாநிலத்தில் அரசு ஓராண்டு கூட தாக்குப்பிடிக்கவில்லை.
அதன்பிறகு மணிப்பூரில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. குதிரை பேரம் நடப்பதாக குற்றச்சாட்டப்பட்டது. அதன்பிறகு மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஜூன் 3, 2001 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட குடியரசுத்தலைவர் ஆட்சி 277- நாட்கள் நீடித்தது. இவ்வாறாக 11 முறை மணிப்பூரில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக முறை இங்கு தான் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் தற்போது பிரச்சினை என்ன?:
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பைரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அங்கு மெய்தி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். அதற்கு 'குகி' என்ற பழங்குடியின சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.மெய்தி சமூகத்தினர் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கடந்த 2023-ம் ஆண்டு மாநில அரசுக்கு மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு மெய்தி மற்றும் குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சுராசந்த்பூர், பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் இந்த மோதல், கலவரமாக மாறியது. வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. மற்ற மாவட்டங்களுக்கும் கலவரம் பரவியது. இந்த கலவரம் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கினர். ஊரடங்கு உத்தரவு போட்டும் கலவரம் அடங்கவில்லை.












Click it and Unblock the Notifications