குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்! நாளை பட்ஜெட் தாக்கல்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகியது. பொது பட்ஜெட்டுடன் இணைந்த ரயில்வே பட்ஜெட், நாளை தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடைபெறுகிறது. இதில் முதல் அமர்வு இன்று முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்பிறகு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு மார்ச் மாதம் 9ம் தேதி 2வது அமர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 12ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைகிறது.

நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இது என்பதால், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரை இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்தது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் ஜனாதிபதி உரையாற்றினார். தீவிரவாதத்திற்கு எதிராக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதியளித்ததோடு, பண மதிப்பிழப்பு, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற பல திட்டங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக அவர் நாடாளுமன்றத்திற்கு, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துவரப்பட்டார்.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமலில் இருந்த ரயில்வே பட்ஜெட்டை தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை நடப்பு ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பொது பட்ஜெட்டுடன் சேர்ந்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது நாளான நாளை, ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவிருக்கிறார்.
முன்னதாக, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் நேற்று 2 அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.












Click it and Unblock the Notifications