10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போகும் மோடியின் “கிப்ட்”!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கிப்ட் எனப்படும் புதிய நிதி நகரத் திட்டத்தால் குஜராத் மற்றும் நாடு முழுவதும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
GIFT - கிப்ட் எனப்படும் இந்தத் திட்டமானது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்து வருகிறது. திட்டம் முழுமையாக அமலுக்கு வரும்போது குஜராத் மற்றும் நாடு முழுவதும் 2022ம் ஆண்டு வாக்கில் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்குமாம்.
குஜராத் அரசு உருவாக்கிய திட்டமாகும் இது. மோடி முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டத்தை தனிப்பட்ட அக்கறை எடுத்து கண்காணித்து வந்தார்.
சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை, நிதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
மோடியின் செல்லத் திட்டம்
இது மோடியின் செல்லத் திட்டம். தனிப்பட்ட முறையில் இதில் அக்கறை காட்டி வந்தார். தற்போது அதை முழுமையாக அமலாக்கும் வேலைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். புதிய முதல்வர் அனந்தி பென் படேலும் இதில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று கிப்ட் நிர்வாக இயக்குநர் ரமாகாந்த் ஜா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10 லட்சம் வேலை
இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் 2020ம் ஆண்டு வாக்கில் 10 லட்சம் புதிய வேலைகளை உருவாக்க முடியும் என்றும் ஜா தெரிவித்தார்.
ரூ. 65,000 கோடியில்
இந்தத் திட்டம் ரூ. 65,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிதி மையங்கள்
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் உள்ளூர் நிதி மையம் மற்றும் சர்வதேச நிதி சேவை மையம் ஆகியவைதான்.
886 ஏக்கர் நிலத்தில்
கிப்ட் திட்டமானது 886 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இதில் 673 ஏக்கர் நிலம் ஏற்கனவே அரசால் கையகப்படுத்தப்பட்டு விட்டதாம்.
ஷாங்காய் போல
இந்தத் திட்டம் நிறைவேறினால் இந்த நகரியமானது, ஷாங்காய், பாரீஸ், லண்டன், டோக்கியோ போல சர்வதேச நிதி நகரமாக மாறும் வாய்ப்புள்ளதாம்.
சபர்மதி ஆற்றங்கரையில்
அகமதாபாத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சபர்மதி ஆற்றங்கரையில் இந்த நிதி நகரத்தை உருவாக்கி வருகிறார்கள். இங்கு ஏற்கனவே பல வங்கிகள், ஐடி நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் தொடங்கி விட்டனவாம்.