குஜராத்.. இன்றைய டார்கெட் வல்சாத் மாவட்டம்.. இரண்டாவது முறையாக சளைக்காமல் வந்த மோடி!
காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக தெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் பங்கேற்கிறார்.
வல்சாத் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியின மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாஜகதான் கொடி நாட்டி வந்திருக்கிறது.
அதேபோல் வல்சாத் சட்டமன்ற தொகுதியிலும் 1990களில் இருந்து தற்போது வரை பாஜகதான் 'கெத்து காட்டி' ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை நீட்டிக்க தற்போது பிரதமரே களம் இறங்கியுள்ளார்.

தேர்தல்
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 1ம் தேதி மற்றும் டிசம்பர் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தொடங்குகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் பிரசாரம் தற்போது அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் 'வல்சாத்' மாவட்டத்திற்கு வருகை தருகிறார். குஜாத்தில் தனது தேர்தல் பரப்புரையை பிரதமர் இங்கிருந்துதான் கடந்த 6ம் தேதி தொடங்கினார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக வருகை தர உள்ளார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இங்கு சாலை வழியாக பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கும் அவர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 1,500 காவலர்கள், 9 எஸ்பி, 17 டிஎஸ்பி, 40 காவல் ஆய்வாளர்கள், 90 உதவி ஆய்வாளர்கள் என பலரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்திற்கு பிரதமர் இரண்டாவது முறையாக வருகிறார் என்பதால் கட்சி முழுவீச்சில் களத்தில் இறங்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மாவட்ட நிலவரம்
வல்சாத் மாவட்டத்தில் தாராம்பூர், வல்சாத், பர்தி, கபரடா மற்றும் உம்பர்கான் என மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் தாரம்பூர் தொகுதியில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட அரவிந்த் பட்டேல் 53.53% வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார். காங்கிரசுக்கு 40.98% வாக்குகள் கிடைத்துள்ளது. அதேபோல 2012ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ்தான் இங்கு கொடி நாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈஸ்வர்பாய் படேல் 50.68 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த தொகுதியில் ஆம் ஆத்மியும் களமிறங்கியுள்ளதால் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

உம்பர்கான்
அதேபோல உம்பர்கான் தொகுதியை பொறுத்த அளவில், கடந்த 1995ம் ஆண்டிலிருந்து 2017 வரை பாஜகவின் ராமன்லால் நானுபாய் பட்கர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக நீடித்து வந்திருக்கிறார். ஆனால் இடையில் 2002 தேர்தலில் காங்கிரஸ் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த முறையும் ராமன்லால் நானுபாய் பட்கரை பாஜக வேட்பாளராக களமிறக்கியுள்ளது. மாவட்டத்தின் பிரதான தொகுதியான வல்சாத் தொகுதியை பொறுத்த அளவில் 1962ம் ஆண்டிலிருந்து 1985 வரை காங்கிரசும், 1990 முதல் 2017 வரை பாஜகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பிரச்னை
பர்தி தொகுதியிலும் இதே நிலைதான். கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு பாஜகவின் கைதான் இங்கு ஓங்கி இருந்து வருகிறது. ஆனால் கபரடா தொகுதி அப்படியல்ல. கடந்த 2017ம் ஆண்டில்தான் பாஜக இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஜித்துபாய் சவுத்ரி பாஜகவுக்கு தாவினார். இதனால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த மாவட்டத்தில் பிரதான பிரச்னையாக 'பர் தாபி - நர்மதா நதி இணைப்புத் திட்டம்' இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டம் கைவிடப்படும் என பாஜக கூறியிருந்தாலும், இதனை வாய் மொழி உறுதிமொழியாக அல்லாமல் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கையில்தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டாவது நாளாக தனது பிரசாரத்தை இந்த மாவட்டத்தில் நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications