அரசியலில் சோனியா காந்தி ஓய்வு.. அவர் 'இடத்திற்கு' பிரியங்கா காந்தி?
சோனியா காந்திக்கு பிறகு அவரது இடத்திற்கு அவரது மகள் பிரியங்கா காந்தி வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி : தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற இருப்பதால், இனி அவரது இடத்திற்கு சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக தலைவர் பொறுப்பை ஏற்றதும் அரசியலில் இருந்து ஓய்வு பெற சோனியா காந்தி முடிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் வரலாற்றில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் என்கிற பெருமையைப் பெற்ற சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல்நிலை கோளாறால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
சோனியா காந்தி ஓய்வு
காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்க உள்ள நிலையில், தீவிர அரசியல் மற்றும் கட்சிப்பணிகளில் இருந்து விலகி இருக்க சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.,ஆக சோனியா காந்தி இருந்து வருகிறார். அதுபோல காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
அரசியலில் பிரியங்கா காந்தி
உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு சோனியா காந்தி தொடர்ந்து வெற்றி பெற்றார். 2004ம் ஆண்டு தேர்தலில் அமேதியை ராகுலுக்கு விட்டு கொடுத்து ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார் சோனியா காந்தி. இந்நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால், அவரது ரேபரேலி தொகுதியில் போட்டியிட தனது மகள் பிரியங்கா காந்திக்கு சோனியா வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரேபரேலியில் பிரியங்கா காந்தி
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சோனியா குஜராத், ஹிமாச்சல் பிரதேச தேர்தல் பிரச்சாரங்களில் கூட கலந்து கொள்ளவில்லை. அதனால், ராகுலின் தலைமையில் காங்கிரஸ் இந்த தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் முழுமையாக தகுதி அடைந்து விட்டார் என்பதாலேயே சோனியா காந்தியும் மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களும் ராகுல் காந்தியை தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், சோனியா காந்தியின் நிழலாக கடந்த பல ஆண்டுகளாக பிரியங்கா காந்தி இருந்து வருவதால் அவரையும் அரசியலில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் வருண் காந்தி
மேலும், தற்போது உத்திரபிரதேசத்தின் சுல்தான்பூர் பகுதியில் இருந்து நாடாளுமன்ற எம்.பி.,ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பா.ஜ.க.,வைச் சேர்ந்த வருண் காந்தியும் காங்கிரஸில் இணைந்து வலுவான ஒரு கட்சியை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு பிரிந்து இருப்பது எந்த வகையிலும் சரியானது அல்ல என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.