மேகதாது அணை விவகாரம்: தமிழகத்தைக் கண்டித்து 18-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு
பெங்களூர்: காவிரி ஆற்றில் அணைகட்டு வதை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கர்நாடகத்தில் வரும் 18-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார் பற்ற ஜனதா தளம் கட்சி உட்பட பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் புதிதாக அணைகள் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசும் விவசாய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்தில் கடந்த மாதம் 28-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
இது தொடர்பாக கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, சிக்கபள்ளாபூர், கோலார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கன்னட மக்களின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு எதிர்ப்பதை ஏற்க முடியாது. தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகள் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து கன்னட கூட்டமைப்பின் சார்பாக கர்நாடகத்தில் வருகிற 18-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழு அடைப்பு நாளன்று பெங்களூரு டவுன்ஹாலில் இருந்து சுதந்திர பூங்கா வரை மாபெரும் கண்டன பேரணி நடத்தப்படும்'.
இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications