இறுகும் பிடி.. விசாரணைக்கு ஆஜராகாத நுபுர் சர்மா.. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய கொல்கத்தா போலீஸ்
கொல்கத்தா: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மா மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்.
இது பெரும் விவாதமானது. இஸ்லாமிய அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்லாமிய நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்தன.

பல்வேறு மாநிலங்களில் வழக்கு
இதையடுத்து பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் புகார் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில போலீஸ் நிலையங்களில் இருந்து விசாரணைக்கு ஆஜராககோரி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி
இந்நிலையில் தான் தனது மிரட்டல் இருப்பதாகவும், அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனக்கூறி நுபுர் சர்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு, நுபுர் சர்மாவை நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது.

மன்னிப்பு கோர வலியுறுத்தல்
‛‛நுபுர் சர்மாவின் பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. நாடு தீப்பற்றி எரிவதற்கு அவர் மட்டுமே தான் காரணம். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா இல்லை அவரால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?. நுபுர் சர்மா டிவியில் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்'' என கடிந்து கொண்டது.

லுக்அவுட் நோட்டீஸ்
நுபுர் சர்மாவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக அவர் மீது மேற்கு வங்க மாநில போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 20ல் விசாரணைக்கு ஆஜராகக்கோரி நார்கேல்டாங்க போலீசாரும், ஜூன் 25ல் ஆஜராககோரி அம்கர்ஸ்ட் போலீசாரும் அவருக்கு சம்மன் அனுப்பினர். கொல்கத்தாவில் இருந்து மட்டும் 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் தான் கொல்கத்தா போலீசார் சார்பில் நுபுர் சர்மாவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications