ரஜினி படம் திரையிட எதிர்ப்பு.. 'கபாலி' போஸ்டர் எரிப்பு... பெங்களூரில் பரபரப்பு !
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ரஜினியின் கபாலி படம் திரையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது பட போஸ்டர்களை தீயிட்டு எரித்த கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. நேற்று தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியானது.

இந்த படம் கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, உப்பள்ளி, பல்லாரி, சிவமொக்கா, கோலார், கோலார் தங்கவயல், மங்களூரு, ராமநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் முதல் முறையாக சுமார் 300 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் கபாலி படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டதற்கு கன்னட சலுவளி கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாட்டாள் நாகராஜ் தலைமையில் திரண்ட அக்கட்சியினர் பெங்களூரில் கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு கபாலி பட போஸ்டரை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய வாட்டாள் நாகராஜ் பேசியதாவது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் விதிமுறைகளை மீறி கர்நாடகாவில் 300 திரையரங்குகளில் கபாலி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. கர்நாடக மாநிலத்தில் பிற மொழி திரைப்படங்கள் திரைக்கு வந்து 4 வாரங்கள் கழித்துதான் திரையிட வேண்டும் என்று கர்நாடக வர்த்தக சபையில் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. அது மீறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் கழிவறை சுவர் தவிர பிற கட்டிடங்களில் கபாலி சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இதை இப்படியே விட்டால் கழிவறையை கூட திரையரங்கமாக மாற்றிவிடுவார்கள் என்று ஆவேசத்துடன் கூறினார்.












Click it and Unblock the Notifications