மண்டியாவில் ரயில் மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் கைது
பெங்களூரு: மண்டியாவில் ரயில் மறியலில் ஈடுபட்ட கன்னட சலுவாலியா கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பெங்களூருவில் கலவரம் வெடித்தது. இரண்டு நாட்களாக சற்று அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் கன்னட சலுவாலியா கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கர்நாடகம் முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று காலை 6 மணிக்கு ரயில் மறியல் போராட்டம் கர்நாடக மாநிலத்தில் தொடங்கியது. கன்னட அமைப்பினர் ஆங்காங்கே ரயில்களை மறிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மண்டியாவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட சலுவாலிய கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலவரம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.