மாண்டியாவில் பந்த்- போலீஸ் ஸ்டேஷன், அரசு அலுவலகம் சூறை- பள்ளி, கல்லூரிகள் மூடல்
மைசூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்ட விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது மாண்டியாவில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
தமிழகத்துக்கு அடுத்த 10 நாட்களுக்கு 15,000 கன அடி வீதம் நீரை கர்நாடகா திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கர்நாடகா ராஜ்ய ரைதா சங்கத்தின் ஸ்ரீரங்கப்பட்டினம் அருகே காவிரி ஆற்றில் நின்று கொண்டு 'சிறை நிரப்பும்' போராட்டத்தை நடத்தினர். காவிரி ஹிதரக்ஷன சமிதியின் தலைவர் ஜி. மாதே கவுடா, முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். சில இடங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாண்டியா மாவட்ட விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக மாண்டியா மாவட்டமே முடங்கிப் போனது.

பள்ளி கல்லூரிகள் மூடல்
விவசாயிகள் போராட்டத்தால் மாண்டியாவில் இன்று கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வரும் 9-ந் தேதியும் கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதனால் மேலும் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
|
சாலை மறியல்
விவசாயிகள் சாலைகளில் படுத்து உருண்டு மறியல் போராட்டங்களை நடத்தினர். எங்கெங்கும் ஜெயலலிதாவின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.
|
சூறை
அதே நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலகங்களை விவசாயிகள் இன்று சூறையாடினார். இதனிடையே கிருஷ்ணராஜசாகர் அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை 4 நாட்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
|
பதற்றம்
மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கொந்தளித்து போயுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications