கட்டண உயர்வை கண்டித்து கேரளா, டெல்லி, உ.பி.யில் ரயில் மறியல்!!
டெல்லி; ரயில் கட்டணங்களை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து டெல்லி, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது.
பயணிகள் ரயில் கட்டணங்களை 14.2 சதவீதம் அதிகரித்து ரயில்வே துறை நேற்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து பல மாநிலங்களிலும் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.
டெல்லியில் இன்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அரவிந்தர் சிங் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து காங்கிரஸ் தொண்டர்களை கலைத்தனர்.
போராட்டத்துக்கு புகழ்பெற்ற கேரளாவிலும் ரயில் கட்டண உயர்வு பிரச்சினை அதிர்வை ஏற்படுத்தியது. கேரள காங்கிரசின் இளைஞர் பிரிவினர் எர்ணாக்குளம் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலும் காங்கிரசார் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தது. இடதுசாரி கட்சிகளின் இளைஞர் பிரிவினரும் திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தி ரயில் மறியல் செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டதுடன், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ரயில் மறியலில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications