புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியின் அரசு செயலாளர் டெல்லியில் திடீர் மரணம்!
டெல்லி: புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியின் அரசு செயலாளராக இருந்த ராகேஷ் சந்திரா மாரடைப்பால் டெல்லியில் மரணமடைந்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் சந்திரா, மத்திய தேர்வாணையம் மூலம் பி.பி.எஸ். (புதுவை அரசு பணி) அதிகாரியாக தேர்வாகி புதுவையில் பணியாற்றி வந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை பெற்றிருந்தார். ராகேஷ் சந்திராவுக்கு 59 வயது ஆகிறது. அவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அரசு செயலாளராக இருந்தவர் ராகேஷ் சந்திரா. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், புதுவை கல்வித்துறை செயலாளராகவும் இருந்து வந்தார்.
முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்தனர். அவர்களுடன் ராகேஷ் சந்திராவும் டெல்லி சென்றிருந்தார். அவர்கள் பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசிவிட்டு, நேற்றிரவு அனைவரும் டெல்லியில் உள்ள புதுவை அரசு மாளிகையில் தங்கியுள்ளனர். ராகேஷ் சந்திரா தனி அறையில் தங்கி இருந்தார்.
இன்று காலை மேலும் பல மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்கு அனைத்து அமைச்சர்களும் புறப்பட தயாராகியுள்ளனர். ஆனால், ராகேஷ் சந்திரா மட்டும் அறையில் இருந்து வெளியே வராததையடுத்து, அவரை அழைத்து வருவதற்காக ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்துள்ளனர். அப்போது, ராகேஷ் சந்திரா கீழே மயங்கி நிலையில் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காலையில் உடை மாற்றி புறப்பட்ட நிலையில் அவர் கீழே விழுந்திருக்கிறார். அவரை சோதித்து பார்த்தபோது தான் அவர் இறந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ராகேஷ் சந்திரா மாரடைப்பு காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் இன்று புதுச்சேரிக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன் பின்னர் கேரளாவில் உள்ள அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.