பரோல் மனு பரிசீலனையில் உள்ளது.. சசிகலாவுக்கு நாளைக்கு பரோல் கிடைக்கலாம்.. புகழேந்தி சொல்கிறார்
பெங்களூர்: சசிகலாவுக்கு நாளை பரோல் கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளது என்று கர்நாடக அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கணவர் நடராஜன் உடல்நிலை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவரை சந்திக்க, 15 நாட்கள் பரோல் கேட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா விண்ணப்பித்திருந்தார்.
இவரது பரோல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இன்று மாலை செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து டிவி சேனல் ஒன்று புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஏதோ அறைக்குள் உட்கார்ந்து கொண்டு இப்படி செய்தி வெளியிடாதீர்கள் என சீறினார். மேலும், எந்த ஏஜென்சி இந்த செய்தியை வெளியிட்டது என்றும் கேட்டார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம்தான் வெளியிட்டது என செய்தியாளர் கூறியபோதும் அதை ஏற்க மறுத்த புகழேந்தி, இன்று மாலை கூட போலீஸ் அதிகாரிகளிடம் பேசியதாகவும், இன்னும் பரோல் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாகவும், புதன்கிழமை (நாளை) பரோலுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார்.