300 பேருக்கு மேல் விருந்தினர் வந்தால் திருமண வீட்டாருக்கு அபராதம்: கர்நாடகாவில் சட்டம் வருகிறது
பெங்களூர்: ஆடம்பர திருமணங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தனி நபர் சட்ட மசோதா ஒன்று கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் சபாநாயகருமான ரமேஷ்குமார் இந்த தனி நபர் மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக மாநில திருமணங்கள் (பதிவு மற்றும் இதர) சட்டம்-2015 என்ற பெயருள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதாக, சபாநாயகர் காக்கோடு திம்மப்பா சபையில் தெரிவித்தார்.
300 அல்லது அதற்கும் குறைவான விருந்தினர்கள் வருகை தந்தால் மட்டுமே அது ஆடம்பரம் இல்லாத திருமணம் என்று இந்த சட்ட மசோதாவில், குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்ச வாடகையாக ரூ.50 ஆயிரம் மட்டுமே நிர்ணயிக்க வேண்டும் என்று மண்டப உரிமையாளர்களுக்கு உத்தரவிட இந்த மசோதா வகை செய்கிறது.
இதுபோன்ற விதிமுறைகள் மீறப்பட்டால், சம்மந்தப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கலாம். ஆடம்பரமாக திருமணம் செய்ய வேண்டும் என்ற வேட்கையில், மக்கள் தங்கள் கையிருப்பை தொலைத்துவிடுவதாக முதல்வர் சித்தராமையா கடந்த ஆண்டு ஒரு கருத்து தெரிவித்திருந்தார். அரசே ஆடம்பர திருமண தடை சட்டத்தை கொண்டுவர உள்ளதாக கூறினார். ஆனால், மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் அது கிடப்பில்போடப்பட்டது.
இந்நிலையில், ரமேஷ்குமார் தாக்கல் செய்த தனி நபர் மசோதா மீது விவாதம் நடந்து தேவைப்படும் மாற்றங்கள் செய்து, சட்டமாக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது எதிர்ப்பு கிளம்பினால் மசோதாவை சட்டமாக மாற்றாமல்விடவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் அதுகுறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications