குழந்தையை விழுங்கியதாக நினைத்து... மலைப் பாம்பை அடித்துக் கொன்ற கிராமமக்கள்
ஹைதராபாத்: குழந்தையை விழுங்கியதாக தவறுதலாக நினைத்த ஆந்திர கிராம மக்கள், அழிந்து வரும் இனங்களில் ஒன்றான மலைப்பாம்பை கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.
ஆந்திராவின் குப்பம் மண்டலத்தில் உள்ள குண்டளயனப்பாளயம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வயிறு வீங்கிய நிலையில் கிடப்பதை அவ்வழியே வந்த கிராமத்தார் பார்த்துள்ளனர்.
மலைப்பாம்பின் வயிறு வீங்கியிருந்ததை வைத்து அது குழந்தையை உயிரோடு விழுங்கியிருக்க வேண்டும் என கிராம மக்கள் எண்ணினர். எனவே, எப்படியாவது குழந்தையை உயிருடன் பாம்பின் வயிற்றிலிருந்து மீட்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.
இதனால், அப்பாம்பின் மீது சரமாரியாக கற்களை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தினர். உண்ட மயக்கத்தில் இருந்த அப்பாம்பால் நகர இயலாததால், கல் வீச்சில் காயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதற்கிடையே, மலைப்பாம்பின் வயிற்றிலிருந்தது குழந்தையல்ல ஆடு என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மலைப்பாம்பை கோணிப்பையில் போட்டு ஊருக்குள் எடுத்துச் சென்றனர்.
அதற்குள்ளாக மலைப்பாம்பை கிராம மக்கள் கல்லால் அடித்துக் கொன்ற தகவல் அறிந்து விரைந்து வந்தனர் வனத்துறை அதிகாரிகள். கிராம மக்களிடமிருந்து மலைப் பாம்பின் உடலை மீட்ட அவர்கள், அதனை முறைப்படி மண்ணில் புதைத்தனர்.
இச்சம்பவம் குறித்து குப்பம் பகுதி வனத்துறை அதிகாரி ரெட்டப்பா கூறும்போது, " வதந்தியை நம்பி ஊர் மக்கள் மலைப்பாம்பை கொன்றுள்ளனர். அழிந்துவரும் இனமான மலைப்பாம்பு கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications