ராதாபுரம் மறு வாக்கு எண்ணிக்கை ரிசல்ட் இப்போதைக்கு இல்லை.. ஜனவரிக்கு வழக்கு ஒத்திவைப்பு
டெல்லி: ராதாபுரம் தொகுதி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடும் தடை ஜனவரி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில், திமுக வேட்பாளர் அப்பாவுவை வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது 19, 20, 21 சுற்றுகள் மற்றும் 203 தபால் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அப்பாவு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டார். வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.
அக்டோபர் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் நியமித்த ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஆனால், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்தது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பாவு, இன்பதுரை தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதி நடத்துவதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில், ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications