அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது
கொல்கத்தா: மேற்குவங்க குற்றப் புலனாய்வுத் துறை, கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து கதிரியக்கப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 4,250 கோடி வரை இருக்கும்.
கதிரியக்க பொருட்களின் நான்கு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை விற்பனை செய்ய இருவர் முயற்சிகள் செய்து வருவதாக அவர்களால் தொடர்பு கொள்ளப்பட்ட ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்திருந்தார். ரகசிய தகவலின் பேரில், சிஐடி அதிகாரிகள் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட நான்கு துண்டுகளில் ஒன்று கலிஃபோர்னியம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பல விஷயங்களுக்கு பயன்படுத்தக் கூடியது என்கிறார்கள். நியூட்ரான்கள் அதிகம் பொதிந்துள்ளவை இவை. அவ்வளவு ஏன்.. ஒரு கிராம் மதிப்பே சுமார் 170 கோடி ரூபாய் வரை ஆகுமாம்.
இதுபற்றி ஒரு அதிகாரி கூறுகையில், "சமூக ஊடகம் வழியாக தொடர்பு கொண்டு குற்றவாளிகளை பிடித்துள்ளோம். கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 250 கிராம் எடையுள்ள கதிரியக்கப் பொருட்களை வாங்கியதாக இருவரும் கூறினர்" என்று அந்த அதிகாரி விளக்கினார்.
குற்றவாளிகள் இருவரும் அணுசக்தி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிஐடி தெரிவித்துள்ளது.
"இந்த பொருட்கள் சில ஆய்வகங்களிலிருந்து திருடப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம்," என்று சிபிஐ கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications