காங்கிரஸ் கூட்டத்தில் மோடி, பாஜகவை தாக்கிப் பேசிய ராகுல் காந்தி
டெல்லி: டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

தகவல் அறியும் சட்டம் மூலம் அரசு அலுவலங்களில் முடங்கிக் கிடந்த தகவல்களை மக்களுக்கு கொண்டு வந்தது காங்கிரஸ். இந்த சட்டம் மூலம் மக்களுக்கு அதிகாரம் அளித்தோம். 10 ஆண்டுகளாக திறம்பட செயல்படும் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டுகிறேன்.
ராஜீவ் காந்தியின் கனவான பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை சீரமைத்தது நாங்கள் தான். இதில் முக்கியப் பங்காற்றிய மணி சங்கர் அய்யரை பாராட்டுகிறேன். காங்கிரஸ் எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பாருங்கள். அதில் ஏதாவது ஒன்று மக்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை என்று கூறுங்கள் பார்ப்போம்.
சோனியா காந்தி தான் எங்களின் சக்தி. ஜனநாயகம் என்பது தனி மனிதரின் ஆட்சி அல்ல. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி.
ஏழை மக்களுக்கு உதவ காங்கிரஸார் பாடுபட வேண்டும். மக்கள் திறமையான, நேர்மையான அரசை விரும்புகிறார்கள். நாங்கள் தான் லோக்பால் மசோதாவை நிறைவேற்றினோம்.
நாங்கள் அதிகாரத்தை ஒருவரிடம் கொடுக்க மாட்டோம். மாறாக மக்களிடம் கொடுப்போம். ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பல மசோதாக்களை கொண்டு வருவோம்.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பிரச்சனை செய்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு வீடு அளிப்போம். உங்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம். நாங்கள் 5 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
9 மானிய விலை சிலிண்டர்கள் போதாது 12 வேண்டும் என்பதை பிரதமரிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கட்சிகளுக்கு மார்க்கெட்டிங் தான் தெரியும். நாட்டின் பயணத்தில் 2014ம் ஆண்டு தேர்தல் முக்கிய திருப்புமுனை ஆகும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் மதிக்கிறோம். நாம் ஒற்றுமைாக இருக்க நாடு நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.
கடுமையான போர்க்களம் நமக்கு முன்பு உள்ளது. இந்த களத்திற்கு வீரத்துடன் செல்வோம். நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. நாட்டு மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications