மீண்டும் காங்கிரஸ் வெல்லும்... டெல்லி கூட்டத்தில் ராகுல் காந்தி பேச்சு
டெல்லி: டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தி்ல கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
பாட்னாவில் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கிய அதே நேரத்தி்ல ராகுல் காந்தியும் பேசினார்.
ராம்லீலா மைதானத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி பேசுகையில், டெல்லியை ஷீலா தீட்சித் முழுமையாக மாற்றியுள்ளார். சில உதாரங்களை நான் சொல்ல விரும்புகிறேன் - டெல்லி மெட்ரோ ரயில் திட்டம்.

ஜகார்த்தாவில், மக்கள் டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை முன்னுதாரணமாக கூறுகிறார்கள்.
டெல்லியில் இளைஞர்கள் காங்கிரஸ் அரசால் பெரும் பலன்களை அடைந்துள்ளனர். டெல்லியில்இடம் பெயர்ந்து வந்து வசிப்போருடன் இணைந்து டெல்லியை நாம் முன்னேற்றியுள்ளோம்.
1500 அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு நாங்கள் உதவியுள்ளோம்.
யார் உண்மையான காங்கிரஸ்காரர்.. யாராவது பாதிக்கப்பட்டால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிக்கரம் நீட்டுபவரே உண்மையான காங்கிரஸ்காரர். ஒரு காங்கிரஸ்காரன் போராடும்போது கோபத்துடன் போராட மாட்டான். அன்புடனும், நேயத்துடனும் அவனது போராட்டம் இருக்கும்.
நாங்கள் உணவுக்கு உரிமை கொடுத்துள்ளோம். வேலைக்கு உரிமை கொடுத்துள்ளோம். கல்விக்கு உரிமை கொடுத்துள்ளோம்.
அரசைக் கேள்வி கேட்கும் உரிமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் இருக்க வேண்டும். அதை நாங்கள் ஆர்டிஐ மூலம் செய்துள்ளோம். ஆர்டிஐ மக்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்றியுள்ளது.
அனைவருக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதைச் செய்துள்ளோம்.
உணவுக்கு எங்கே பணம் உள்ளது என்று எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர். நாங்கள் அதை உருவாக்குவோம் என்று பதிலளித்தோம் செய்து காட்டியுள்ளோம்.
ஏழை மக்கள் சக்தி படைத்தவர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அடிப்படைக் கட்டமைப்பு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் பேசுகின்றனர். நான் புள்ளிவிவரங்களை கையில் வைத்துள்ளேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போடப்பட்டதை விட 3 மடங்கு அதிக சாலைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி போட்டுள்ளது.
எல்லாவற்றிலும் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் அதை விரும்புவதில்லை. அவர்கள் அப்படியே இருக்கட்டும்.
உங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்தும் கேட்டு்தான் எங்களது கொள்கைகளை நாங்கள் வகுத்தோம். அதன்படியே செயல்படுகிறோம்.
டெல்லியில் வளர்ச்சியே இல்லை என்று யாரும் கூற முடியாது. எதிர்க்கட்சியினர் கூட கூற முடியாது. காங்கிரஸ் மீண்டும் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. டெல்லியில் காங்கிரஸை வெல்ல வையுங்கள் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications