ஏழைகளிடமிருந்து பறித்து நீரவ் மோடியின் பாக்கெட்டில் நிரப்பிய மோடி... ராகுல் #CashCrunch
500, 1000 நோட்டுகளை மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு பெரும் பணக்காரர் நீரவ் மோடியின் பாக்கெட்டில் பிரதமர் நரேந்திர மோடி நிரப்பியுள்ளார் என்று ராகுல் குற்றம்சாட்டினார்.
Recommended Video

டெல்லி: பணமதிப்பிழப்பின் மூலம் பெற்ற நோட்டுகளை நீரவ் மோடியின் பாக்கெட்டில் போட்ட பிரதமர் நரேந்திர மோடி என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணி முதல் ரூ.500 , ரூ1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இதனால் மக்கள் தங்களிடம் உள்ள அந்த நோட்டுகளை வங்கி, தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூ. 2000-ஆக மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனால் ஏடிஎம், வங்கி வாசல்களில் அன்றாட பிழைப்பை விட்டு விட்டு பொதுமக்கள் வரிசையில் நின்றிருந்தனர். இதில் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன.

அதிர்ச்சி
இந்த சம்பவத்தால் பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. பணமதிப்பிழப்பு விவகாரம் செய்திருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தின. இது இவ்வாறிருக்க கடந்த 3 நாட்களாக வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பணம் எடுக்காமல் தவிப்பு
இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டுள்ளனர். வடமாநிலங்களிலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் அவசரத் தேவைக்குகூட பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய காலமான தற்போது பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என திரிணமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

ஒன்றரை ஆண்டுகள்
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறுகையில் பணமதிப்பிழப்புக்கு பின்னர் பணத்தட்டுப்பாடு 50 நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில் தற்போது ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் பணத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.

நீரவ் மோடியின் பாக்கெட்
பணத்தட்டுப்பாடு குறித்து ராகுல் காந்தி கூறுகையில் ரூ. 30,000 கோடியை கடனாக பெற்றுக் கொண்டு நீரவ் மோடி எங்கோ சென்றுவிட்டார். ஆனால் பிரதமர் வாயே திறக்கவில்லை. நம்மை வங்கி முன்பு வரிசைகளில் நிற்க வைத்துவிட்டு நம்மிடம் இருந்த ரூ.500, ரூ1000 நோட்டுகளை பறித்து நீரவ் மோடியின் பாக்கெட்டில் போட்டுவிட்டனர்.

ரபேல் விமானம்
நாடாளுமன்றத்தில் பேசவே பிரதமர் பயப்படுகிறார். எங்களுக்கு 15 நிமிடங்கள் நேரம் தந்தால் போதும் ரபேல் விமான கொள்முதல், நீரவ் மோடி நாட்டை விட்டு பறந்த விவகாரம் ஆகியவற்றின் பின்புலத்தில் உள்ள உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications