ஒரு புறம் தூய்மை இந்தியா திட்டம்.. மறுபுறம் மதவாத விஷம்: மோடி சர்க்கார் மீது ராகுல் கடும் தாக்கு!!
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறிக் கொண்டே மதவாத விஷத்தை மறுபுறத்தில் பரப்புகிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பெரிய நிகழ்ச்சிகளில் எதுவும் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளாமல் இருந்தனர்.

தற்போது ஜஹவர்லால் நேருவின் 125வது பிறந்த நாளை முன்வைத்து அரசியல் வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் வரும் 17,18 ஆகிய நாட்களில் நடத்தப்படும் நேரு பிறந்த நாள் மாநாட்டுக்கு பாஜக தவிர்த்து அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் என பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லியில் இன்று நேருவின் 125வது பிறந்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் ஆளுநர் ஷீலா தீட்சித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நேருவின் திரு உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி சிறுவர்கள் நேருவைப் போல் உடை அணிந்து கலந்து கொண்டனர். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதாவது:
உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள நைனி சிறைச்சாலையை பார்த்த போதுதான் நேரு உள்ளிட்ட தலைவர்கள் நம் நாட்டின் சுதந்திரத்துக்காக எப்படியான துன்பங்களை எதிர்கொண்டனர் என அறிந்து கொண்டேன். அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் "என்னிடம் இருந்த கோப குணத்தை இந்த சிறைச்சாலையில் அடைத்ததன் மூலம் விலக வைத்த பிரிட்டிஷாருக்கு நன்றி" என நேரு எழுதியூள்ளார்.
நேருவின் தொலைநோக்கு சிந்தனையால்தான் இன்று செவ்வாய்கிரகத்துக்கு நாம் விண்கலத்தை அனுப்பி சாதிக்க முடிகிறது.
ஒரு புறம் வீதிகளை சுத்தப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறவர்கள் மறுபுறம் மதவாத வெறுப்பு அரசியல், என்னும் விஷத்தைப் பரப்புகின்றனர். அவர்கள் அதிக அளவு புகைப்படங்களை எடுக்கிறார்கள்.. ஆனால் குறைந்த அளவே செயல்படுகிறார்கள். நமது அடித்தளம் பலவீனமாக இருக்கும் போது இந்த நாட்டின் எதிரிகள் பலமடைகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் அன்பு, சகோதரத்துவம் என்ற கொள்கைகள் மூலம் மட்டுமே இந்த வெறுப்பு அரசியலை எதிர்த்து போராட முடியும். இந்த நாட்டை ஆத்திரக்கார்கள்தான் ஆட்சி செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சில தவறுகளை செய்திருக்கலாம். ஆனால் ஒருபோதும் மதச்சார்பின்மை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications