“ஜார்க்கண்ட் அரசை சீர்குலைக்க முயன்ற பாஜக! தடுத்தது இந்தியா கூட்டணிதான்!” ராகுல் காந்தி பெருமிதம்
ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசை பாஜக சீர்குலைக்க முயன்றதாகவும், இந்த முயற்சியை இந்தியா கூட்டணிதான் தடுத்து நிறுத்தியது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது.

இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், கடந்த ஆண்டு தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் சோரன் தனக்கு அனுப்பப்பட்ட 9 சம்மன்களையும் புறக்கணித்தார். இதற்கிடையில், கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டை மேற்கொண்டனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் அதிரடி ரெய்டு மேற்கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் விமர்சித்தனர்.
அமலாக்கத்துறையினரின் நோக்கம், சோரனை கைது செய்வதுதான். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது என முக்தி மோர்ச்சா கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 31ம் தேதி இரவு சோரன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநரை சந்தித்தபோது அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். கடிதம் வழங்கப்பட்ட உடனேயே அவர் கைது செய்யப்பட்டார்.
இவரது கைதுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவின் ராஜ்யசபா எம்.பியான பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் அரசை பாஜக சீர்குலைக்க முயன்றதாகவும், இந்த முயற்சியை இந்தியா கூட்டணிதான் தடுத்து நிறுத்தியது எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரை தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் பாகூருக்கு வந்திருக்கிறது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் மேற்குறிப்பிட்டதை கூறியுள்ளார்.
மேலும், வேலையில்லா பிரச்சனை, பணமதிப்பிழப்புக் கொள்கை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளையும் சுட்டிக்காட்டி மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரனின் ராஜினாமாவுக்கு பிறகு, ஜார்க்கண்ட் புலி என்று அழைக்கப்படும் அமைச்சர் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications