பிரியங்கா "ஓவர்டேக்" செய்து விடுவாரோ என்று பயப்படுகிறார் ராகுல்.. பாஜக சீண்டல்!
டெல்லி: லோக்சபாவில் திடீரென ராகுல் காந்திக்குக் கோபம் வந்ததற்கு பாஜக ஒரு வித்தியாசமான காரணத்தைக் கூறியுள்ளது. தேர்தல் தோல்வியால் எங்கே தான் ஒதுக்கப்பட்டு பிரியங்கா காந்தியிடம் பொறுப்புகளும், கட்சியும் போய் விடுமோ என்று பதட்டமடைந்துள்ளார் ராகுல் காந்தி. இதனால்தான் இதுவரை இல்லாத அளவுக்கு லோக்சபாவில் கோபம் காட்டியுள்ளார் அவர் என்று பாஜக கூறியுள்ளது.
தேர்தல் தோல்வியை ராகுல் காந்தியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் ஏற்பட்ட இயலாமைதான் அவரைக் கோபம் மிக்கவராக மாற்றியிருக்கிறது என்றும் பாஜகவினர் வர்ணிக்கின்றனர்.
மேலும் கட்சிக்குள் ஏற்பட்டு வரும் அழுத்தங்களையும், நெருக்கடிகளையும், சவால்களையும் அவரால் சமாளிக்க முடியவில்லை. இதன் வெளிப்பாடுதான் இந்த விரக்தி கலந்த கோபம் என்றும் பாஜக கூறுகிறது.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதுகுறித்துக் கூறுகையில், காரணம் மிகத் தெளிவானது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இன்று தேர்தல் தோல்வி காரணமாக கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அரண்மனைப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளேயே புரட்சி வெடித்துள்ளது என்றார் ஜேட்லி.
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், சுரத்தை இழந்து விட்டார் ராகுல் காந்தி. தோல்வியால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை. நிஜத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. இதுதான் காரணம் என்றார்.
அதேசமயம், பிரியங்கா காந்தி பக்கம் தற்போது காங்கிரஸாரில் பலர் சாயத் தொடங்கியுள்ளனர். ராகுல் காந்தியை நீக்கி விட்டு அவருக்குப் பதில் பிரியங்காவிடம் கட்சிப் பொறுப்பை தர வேண்டும் என்ற பேச்சுக்கள் கிளம்பியுள்ளன. இதுவும் ராகுலை டென்ஷனாக்கியிருப்பதாக பாஜகவினர் மட்டுமல்லாமல் வேறு பலரும் கூட கூற ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications