ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை இந்தியா கூட்டணி மீட்டெடுக்கும்-பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் ராகுல்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்ட 'மாநில அந்தஸ்தை' காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி மீட்டுத் தரும் என்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும் 1947-ம் ஆண்டே ஒழிக்கப்பட்டுவிட்ட மன்னரைப் போல ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தற்போது செயல்பட்டு வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான ரம்பான் மாவட்டம் பனிஹால் சட்டசபை தொகுதியின் சங்கல்தான் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அரசு பணி, 40 வயது : காஷ்மீர் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: காஷ்மீரில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் எங்களது முதல் பணியே அரசு பணிக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துவதான். தினக் கூலிகளின் ஊதியத்தை ஒழுங்குபடுத்துவோம். தினக் கூலிகளை நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்துவோம். அவர்களது ஊதியத்தை உயர்த்துவோம். ஜம்மு காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாங்கத்தை செயல்படுத்துவதுதான் எமது இலக்கு. ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொருவரும் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவர் என உறுதியளிக்கிறோம்.
ஜம்மு காஷ்மீரின் பேரழகு: ஜம்மு காஷ்மீர் மிக அழகிய நிலம். தேர்தலுக்குப் பின்னரும் இங்கு வருவோம். எனக்கு வெறும் 45 நிமிட நேரம்தான் கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டீர்கள். எனக்கு 2 அல்லது 3 நாட்களாவது கொடுத்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் இப்படி ஒரு அழகான நிலத்தை நான் பார்த்தது இல்லை.
ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்து: ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது எங்களது முதன்மைப் பணியாக இருக்கும். ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு முன்னரே மாநில அந்தஸ்தைத் தர கோரினோம். ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாக்கப்பட்ட பின்னர்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என விரும்பினோம். ஆனால் பாஜகதான் இதனை விரும்பவில்லை. பாஜகதான் முதலில் தேர்தல் நடத்தப்படலாம்.. அப்புறம் மாநில அந்தஸ்தை பார்க்கலாம் என கைவிரித்தது. பாஜக விரும்புகிறதோ இல்லையோ.. ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்துக்காக இந்தியா கூட்டணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து செயல்படும்.
காஷ்மீர் உரிமைகளைப் பறிக்க முடியாது: இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரில்தான். ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும். யார் ஒருவராலும் இந்த மண்ணின் மக்களின் உரிமைகளையும் வளத்தையும் பறித்துவிட முடியாது.
புதிய மன்னராக ஆளுநர்: 1947-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நாம் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து ஜனநாயக அரசை அமைத்தோம். அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான அரசாங்கத்தை அமைத்தோம். ஆனால் ஜம்மு காஷ்மீரில் இப்போது தம்மை ஒருவர் மன்னராக நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மன்னர்தான் துணை நிலை ஆளுநர் பதவி வகித்து வரும் மனோஜ் சின்ஹா. ஜம்மு காஷ்மீரின் புதிய மன்னராக நினைத்துக் கொண்டு செயல்படுகிறவர்தான் ஆளுநர் மனோஜ் சின்ஹா. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications