மெர்சலுக்கு மீண்டும் சப்போர்ட்... தமிழில் ட்வீட் செய்த ராகுல் காந்தி!
டெல்லி: மெர்சல் படத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் ட்வீட் செய்துள்ளார். இந்த முறை தமிழிலேயே ட்விட்டை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என மிரட்ட ஆரம்பித்தது.
இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால், மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.
இதற்கிடையே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் நேற்று காலையில் ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவாக தனது ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
அதில், "திரு.மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழ்ந்த வெளிப்பாடு. மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு இறக்கச் செய்யாதீர்கள்," என்று கூறியுள்ளார். அதாவது தனது முந்தைய ஆங்கில ட்விட்டை முழுமையாக தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
இது விஜய் ரசிகர்களை மட்டுமல்ல, தமிழ் ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.