ராகுல்காந்தி பெயரை கின்னசில் இடம்பெற மனு.... ஏன் தெரியுமா?
காங்கிரஸ் கட்சி 27 தேர்தல்களில் தோல்வி அடைந்ததை சாதனையாக கருதி ராகுல்காந்தி பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்க கோரி விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: ராகுல்காந்தியின் நிர்வாகத்தின் கீழ் 27 தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்திருப்பதாகவும் இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த விஷால் திவான் என்ற மாணவர், முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
உலக அளவில் செய்யப்படும் சாதனைகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது. அமெரிக்காவில் உள்ள கின்னஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த சாதனை புத்தகத்தை தொகுத்து தயாரித்து வெளியிடுகிறது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் தங்களது சாதனையை இடம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆய்வு செய்து, தங்கள் அதிகாரிகள் மூலம் உரிய ஆவணங்கள் பெற்று உறுதி செய்து கொண்டு, அந்த சாதனையை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வார்கள்

ராகுல்காந்தி பெயர்
ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மனு அளித்துள்ளார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவரான விஷால் திவான். இதற்காக இவர் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பம் ஒன்றை அளித்து உள்ளார்.

காங்கிரஸ் தொடர் தோல்வி
விஷால் திவான் அளித்துள்ள விண்ணப்பத்தில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மேற்பார்வையில்தான் அக்கட்சி போட்டியிட்டு இருக்கிறது. அவ்வாறு ராகுல்காந்தியின் மேற்பார்வையில் நடைபெற்ற 27 தேர்தல்களில் அக்கட்சி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது.

லோக்சபா தேர்தல்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி வழி நடத்தினார். அப்போது காங்கிரஸ் 10 ஆண்டு கால ஆட்சியை மட்டும் இழக்காமல் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாமல் சென்றது. 543 தொகுதிகளில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியானது. காங்கிரஸ் 44 தொகுதிகளில் மட்டும் வென்றது.

5 மாநில சட்டசபைத் தேர்தல்
சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், மணிப்பூர் மற்றும் கோவாவில் அக்கட்சி தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதிலும் உதிரிகட்சிகளின் ஆதரவை பெறமுடியாமல் போனதால் அந்த 2 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.
மணிப்பூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் சென்ற விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

தொடர் தோல்வி
தொடர் தோல்வியை ஒரு சாதனையாக எடுத்துக்கொண்டு தோல்வியின் நாயகன் ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரவேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்தது. இந்நிலையில் இதுபோன்ற விண்ணப்பம் அளிக்கப்பட்டு உள்ளது.

கின்னஸில் இடம் பெறுமா?
விஷால் திவானின் விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்ட போதிலும், ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு வந்தாலே போதும் அந்தக்கட்சிக்கு தோல்வி உறுதி என்று சமீபகாலமாக ஒரு பேச்சு உலா வருகிறது. இதற்கு பல உதாரணங்களை எதிர்கட்சியினர் கூறுகின்றனர். இப்போது ராகுல்காந்தியின் பெயர் கின்னஸ் புத்தகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications