சோனியா ஓய்வெடுக்க வேண்டும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராகனும்: திக்விஜய்சிங் திடீர் பேட்டி
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி உடனே ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:
எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வீழ்ச்சி ஏற்படுவது உண்டு. ஒரு கட்சியின் தலைவருக்கும், கட்சிக்கு ஏற்படும் வீழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சரிவுக்கு தலைமையை குறை சொல்லக் கூடாது.
அதே சமயத்தில் இந்த இக்கட்டான நேரத்தில் காங்கிரஸ் தலைவர் பதவி பொறுப்பை சோனியாவிடம் இருந்து ராகுல் பெற வேண்டும். இந்த மாற்றம் நடைபெற இதுவே சரியான நேரமாகும். சோனியாவுக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு ராகுல் தலைவர் ஆவது நல்லது. அதை நாங்கள் அனைவரும் வரவேற்போம்.
காங்கிரஸ் எப்போதுமே இளம் தலைமுறையை வரவேற்கும் கட்சியாகும். ஜவகர்லால் நேரு தன் 38வது வயதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஆனார். மவுலானா ஆசாத் காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்ற போது அவருக்கு வயது 35. எனவே ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க இதுவே சரியான நேரமாகும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மாநில சட்டசபைக்கு நடக்கும் தேர்தல்களிலும் ஒரே கட்சி தோற்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வென்ற பிறகு தொடர்ச்சியாக மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. அது போலதான் இப்போதும் நடக்கிறது. எனவே அது பற்றி காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.