“அசுரன்” போல் புரட்சி செய்த ராகுல் காந்தி.. தலித் பெண் செருப்பை கையால் எடுத்து மாட்டிவிட்டு ஆறுதல்
போபால்: பட்டியலின பெண்மணிக்கு தனது கையால் ராகுல் காந்தி செருப்பு மாட்டிவிட்டு மத்திய பிரதேசத்தில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொண்டு இருக்கும் இவர் அங்குள்ள பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து பேசி வருகிறார். அம்மாநிலத்தின் புந்தேல்கண்டில் இவர் பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள பெண்களை சந்தித்து உரையாடினார். அப்போது தங்களுக்கு எதிராக நடக்கும் சாதிய கொடுமைகள் பற்றி பட்டியலின பெண் ஒருவர் அழுதுகொண்டே ராகுல் காந்தியிடம் விவரித்தார்.

பெண்: செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் கெட்ட சகுனம் என்று எங்களை சொல்வார்கள். செருப்பு இல்லாமல் ஏன் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள் என கேட்பார்கள்.
ராகுல் காந்தி: உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர் உள்ளார்கள்?
பெண்: மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன.
ராகுல் காந்தி: மொத்தமே 4 குடும்பங்கள் தானா?
பெண்: தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றால் மணிக் கணக்கில் எங்களை காத்திருக்க வைப்பார்கள். தூரமாக போய் உட்கார் என்று துரத்தி அடிப்பார்கள். தண்ணீர் கூட எடுக்க விடாமல் எங்களை தடுக்கிறார்கள் சார்.
ராகுல் காந்தி: யார் உங்களை இப்படி எல்லாம் செய்வது?
பெண்: உயர் ஜாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாக்கூர்கள், அகிர் ஆகிய சமூகத்தினர் இவ்வாறு எங்களை நடத்துகிறார்கள். நாங்கள் எங்கு சென்றாலும் அவர்கள் எங்களை தடுப்பார்கள். எங்களை திருமணத்திற்கு வருமாறு அழைப்பார்கள். ஆனால் குப்பை தொட்டிக்கு அருகே எங்களை அமர வைப்பார்கள். இல்லாவிட்டால் கால்வாய் பக்கத்தில் உட்கார சொல்வார்கள். நாற்காலியில் நாங்கள் அமர்ந்து உணவருந்தினால் எங்களை அங்கிருந்து விரட்டி அடித்து விடுவார்கள்.
நாங்கள் எப்படி சாப்பிடுவது? இதயம் முழுவதும் எங்களுக்கு துக்கம் மட்டுமே நிறைந்து இருக்கிறது. நாங்கள் இந்த வழிகளை எல்லாம் சகித்துக் கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் இவற்றை தாங்க முடியாது. எங்களுக்கு எல்லா திசைகளிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. சுதந்திரமான நாடு என்று இதை சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறோம். அனைத்து வகையிலும் நாங்கள் மோசமான வாழ்க்கையை வாழ்றோம்.

என்னை நீங்கள் செருப்பு அணிய அனுமதித்தால் நான் செருப்பு அணிவேன். இல்லாவிட்டால் நான் அதை கையிலேயே வைத்துக் கொள்கிறேன்." என்று அழுதுகொண்டே கூறினார்.
இதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி செருப்பு அணிந்து கொள்ளுங்கள் என்று கூறி மூதாட்டி கையில் இருந்த செருப்பை வாங்கி அவரே அணிவித்து விட்டார். அத்துடன் இந்த மூதாட்டி அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த அசுரன் படத்தில் பட்டியலின பெண்கள் செருப்பு அணியும் காட்சி இடம்பெற்று இருக்கும். அத்தகைய ஒரு புரட்சியை ராகுல் காந்தி இன்று செய்திருக்கிறார்.
அதேநேரம் இது புரட்சியல்ல, 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ்தானே இந்த நாட்டை ஆண்டது என்ற எதிர் குரல்களும் ஒலிக்கின்றன.












Click it and Unblock the Notifications