உ.பி. மதக் கலவரங்கள்: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்?
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கிளப்பி வைத்த உத்தரப்பிரதேச மத வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த புதன்கிழமையன்று கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் அதிகரித்து வரும் மதக் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து, தனது இருக்கையில் இருந்து எழுந்த ராகுல், கேள்வி நேரத்தை நடத்த விடாமல் பிரச்சினை எழுப்பினார். இதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராகுல், மோடி ஆட்சிக்காலத்தில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 600 மத வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தேர்தல் ஆதாயத்துக்காக இத்தகைய வன்முறை சம்பவங்கள் தூண்டிவிடப்படுகின்றன என்றார்.
இதற்கு பாரதிய ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரியோ, உள்துறை அமைச்சக புள்ளி விவரப்படியே 623 மத வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள இடங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications